Karuvi Evaro Kaiyaalbavar Evaro
My post content
கருவி எவரோ கையாள்பவர் எவரோ
அஞ்ஞானம் புவியில் அறவே ஒழிக்க
விஞ்ஞானம் வளர்ந்தது வேரூன்றிய மரமாய்
குக்கிராமத்துக் குழந்தைகள் கிரமமாய் படிக்க
குவித்து வைத்தது பாடங்களின் பொற்காசு
முகம் தெரியாமல் உழைத்த உழவர்களுக்கு
முன்னால் முளைத்தது உலகளாவிய சந்தை
பழங்குடி மக்களின் கைவினைப் பொருட்கள்
அழகாக விற்பனையானது வலைத்தளம் வழியாக
முன்னோர்களை மணிக்கணக்கில் முழுக்கிய பணிகளை
கணினியாலே செய்து முடித்தது நொடிநேரத்தில்
தொலை தூரம் நடந்து பெற்ற தொடர்பை
தொட்டவுடன் கைக்குள் அடக்கியது கைபேசியில்
கண்காணாக் காட்சிகளை காணொளியில் கொணர்ந்து
மணப்பெண்ணாய் அமர்த்தியது படுக்கையறையில்
இயற்கையின் சீற்றத்தை சிறப்பாகக் கணித்து
செயற்கை நுண்ணறிவால் உயிர் காத்தது
அதிசய வழிமுறைகளை வக்கணையாய் வழிநடத்தி
மருத்துவ மந்திரஜாலத்தை மேடை ஏற்றியது
சந்திர லோகத்தில் சகஜமாய் உலாவி
செவ்வாய் கிரகத்தில் குடி பெயர்ந்தது
வளர்ச்சிக்கு தேவை விஞ்ஞானம் என்றால்
மலர்ச்சிக்கு தேவை மெய் ஞானம்
கருவியோடு கருவியாய் மரக்காலாய் மாறாமல்
கருணையோடு கவிதையோடு கருவிகளைக் கையாளுவோம்.